மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சர்கள் பாதுகாப்பு நீக்கம்-
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்றையதினம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருந்தார். இதனையடுத்தே அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்-
பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்h சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் பதவிகளை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பதவி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகள் என்பனவற்றில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்-
களுத்துறை மாவட்டம் பேருவளை மக்கோனா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை குருநாகல் மாவத்தகம பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகனங்கள் சில சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதுளை, இரத்தினபுரி மண்சரிவு அபாயம், 100ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு-
பதுளை, லுணுகல, சோலன்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 117பேர் இவ்வாறு இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுணுகல பிரதேச செயலர் டீ.எம்.எல்.எச் திசாநாயக்க கூறியுள்ளார். வெளியேற்றப்பட்ட அனைவரும் சோலன்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நேற்றுமாலை தொடக்கம் சோலன்ஸ் தோட்ட மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தெபலகலவத்தை பகுதியில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
வெலிமடை கொழும்பு பஸ் விபத்தில் ஐவர் காயம்-
மாவனெல்லை, பஹல கடுகண்ணாவை பகுதியில் தனியார் பஸ்சொன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று இன்று அதிகாலை பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும், நான்கு ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து நாம் ஏமாறத் தேவையில்லை-மனோ கணேசன்-
ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்கத் தயார் நிலையில் இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இவையே தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பல்வேறு காரணங்கள் கொண்டு எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை, இது கசப்பானதாக இருந்தாலும் உண்மை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய இன, மதவாத ஆட்சியை மாற்றி ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த எதிரணி கூட்டை இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளோம். அதற்காக, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எதிரணி ஆட்சி பீடம் ஏறினால் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வுகளில் பாலுந்தேனும் உடனடியாக ஓடும் என நான் கூறவில்லை. அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து நாம் ஏமாறத் தேவையில்லை. யதார்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். எமது முதல் நோக்கம் ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.