பொது எதிரணிகளின் உடன்படிக்கை கைச்சாத்து-

pothu ethiraniyin udanpadikkai (2)எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றுமுற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையின் பின்னர் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் மாதுளுவாவே சோபித தேரர், கிராம்பே ஆனந்த தேரர், அத்துரலியே ரத்ன தேரர், தீனியாவெல பாலித தேரர், ரீ செல்டன் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன், சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி, ஹமால் நிலங்க, ஆரியவன்ஸ திஸாநாயக்க, சாமிலா பெரேரா, அருண சொய்ஸா, லால் விஜயநாயக்க இராஜ உஸ்வெட்ட கெய்யா, ஸ்ரீமஸ்ரீ கப்பு ஆராய்ச்சி, சமன் ரத்னபிரிய, சுசின் ஜயசேகர, எல்மோ பெரேரா, நிர்மல் ரஞ்ஜித் தேவசிறி, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜயசிங்க ஜே.எஸ். குருப்பு, தாம் விமலசேன, நஜா முகம்மட், கெமுனு விஜயரட்ண, பேர்சி விக்ரமசேகர, சிரால் லக்திலக ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்மோடு இன்னும் பலர் இணையவுள்ளனர்-சந்திரிகா-

untitledமைத்திரிபால சிறிசேன என்பவர், ஜனநாயகத் தலைவர். எதிர் கருத்துக்களை வெளியிடுவோரை வீதியில் கொன்று குவிக்காதவர். அடுத்தவர்களின் கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய, பொறுமைசாலியான தலைவராவார். எதிரணியின் இந்த புதிய போராட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் குழுவொன்றே இருக்கிறது. இன்னும் பலர் வரவிருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தற்போதுள்ள ஊழல், மோசடி அரசாங்கத்தைப் போன்ற அரசாங்கமொன்று எந்தவொரு தசாப்தத்திலேனும் இருக்கவில்லை. இன்று எமது நாடு உள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையை மாற்ற வேண்டும். அதற்காக, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று சந்திரிகா குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.

பிரபாகரனின் சொத்துக்களை ஏலமிட தீர்மானம்-

imagesCAD2KKY8புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இரு அச்சகங்கள் உள்ளிட்ட சொத்துக்களே இவ்வாறு ஏலமிடப்படவுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டு வங்கியொன்றின் கணக்கிலிருந்த 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தேசிய வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ள 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் ஆகியனவும் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தை, திறைசேறிக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்-

இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடலோர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்கவென அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவர் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில், சீன போர்க்கப்பல் முகாமிட்டிருப்பது குறித்த இந்தியாவின் கவலையை அவர் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது-

mahinda_rajapakseஎதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணம், இன்று தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.