தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்கூட்டம் இன்றுமாலை கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பாக இதில் பங்கேற்றிருந்தவர்கள் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மகாநாடு ஒன்றில் வைத்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.