கிழக்கில் நான்கு வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல்-
மட்டக்களப்பு, காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனவை ஆதரித்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி அல்.அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின்மீதுமே மேற்படி கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு-
குருநாகல் பகுதியில் அமைந்துள்ள, வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேடருவவின் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்த குறித்த வீட்டின் காவலாளி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த லக்ஷ்மன் வேடருவ அண்மையில் அதிலிருந்து விலகி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு-
புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை தமிழக அரசாங்கம் நீடித்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை தலைமை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னாள் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் வேனில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இவற்றை புலிகளே மேற்கொண்டதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் கடந்த வருடம் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் என்பவை தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தன. இவ் விடயங்கள் புலிகள் அமைப்பு தமிழகத்தில் தொடர்ந்தும் இயங்குகின்றது என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, புலிகள் மீதான தடையும் நீடிக்கப்படுகின்றது என ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS Read more