Header image alt text

ஜனாதிபதியின் வெற்றிக்கான வாழ்த்தும், தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளும்- மு.தம்பிராசா-

thambiதமிழ் பேசும் மக்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை நாட்டில் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான விருப்பத்தை தமது அமோக ஆதரவை வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தி நாட்டின் தலைவராக மைத்திரிபால சிறிசேனாவை வெற்றிகொள்ள வைத்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மூலம் இலங்கை நாட்டில் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதையும் அதற்கு பக்கதுணையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் செயற்படுவார் என்றும் நான் நம்புகிறேன். Read more

பிரதமரின் செயலர் நியமனம், மைத்திரிபாலவின் வெற்றிடத்திற்கு நியமனம், ஷிராணிக்கு பதவி-

siraniபுதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன இந் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு பொலனறுவை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியலில் அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்ற ஜயசிங்க பண்டார நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுக்கொள்வார். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பேன் என மைத்திரிபாலவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் இழப்பு, தேர்தலின் மோசடி குறித்து விசாரணை-

mangalaஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 17வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறிய நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சுயாதீன வேட்பாளர்கள் இருவரினதும், 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களதும் கட்டுப் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல் ஆணையாளர் யு.அமரதாச இதனைத் தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர்கள் தலா 75 ஆயிரம் ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணமாக செலுத்தி இருந்தனர். இதன்படி அவர்களால் செலுத்தப்பட்ட 9 லட்சம் ரூபாய் கட்டுப்பணம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த அரசாங்கம், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அதிகாரத்தையும், அரச சொத்துக்களையும் பயன்படுத்திய விதம் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதிகார பலம், அரசாங்க சொத்துக்கள், காவற்துறை பலம் என அனைத்தையும் கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள்-ஜனாதிபதி அழைப்பு-

parlimentதேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். இந்த நாட்டிலிருக்கின்ற அனைவரும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற இனமத பேதங்கள் பாராது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும். எமது நாட்டைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தை அதிகமாக ஈட்டித் தரும் துறையாக விவசாயம் காணப்படுகிறது. எனவே எனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும். அத்துடன் சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பக்கச்சார்பற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி இலஞ்சம், ஊழல் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் இல்லாது நாட்டை சமாதான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையில் எமது அரசு ஈடுபடும். சர்வதேசத்திலும், தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டை கட்டி எழுப்பி நல்லுறவை பேணுவது எமது தலையாய கடமையாகும் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து தேசிய அரசினை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். எனது முதலாவதும் இறுதியுமான தேர்தல் இது. இந்த தேசத்திற்கு தேவையானவர் அரசன் அல்ல மாறாக நல்ல ஒரு மனிதனே என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கெரிய மஹாநாயக்கர்களை சந்தித்தனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர். இடையில் ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலதா மாளிகையில் மத ஆராதனையில் ஈடுபட்டத்தின் பின்னர் மாஹா நாயக்கர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை- புதிய அமைச்சரவை இன்று நியமனம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கண்டி சிறீ தலதா மாளிகையில் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்காக உரை நிகழத்தவுள்ளார். இதற்காக அவர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்படவுள்ளார். கண்டி செல்லும்போது, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்தவும் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்று பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் இதில் அமைச்சுப் பதவிகளை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பூஜித்த அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை, நிதி அமைச்சுகளின் செயலர்கள் நியமனம், ரூபவாஹினி தலைவர் பணியேற்பு-

செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலராக சந்திரசேன மாலியத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கையின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார். இவர், இதற்குமுன் திட்டமிடல் அமைச்சு, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அரச சேவையில் அவர் 45வருட அனுபவத்தை கொண்டவராவார். இதேவேளை மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சோமரத்தின திஸாநாயக்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடமையை நேற்றையதினம் மாலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பெசில் ராஜபக்ஷ குடும்பத்தினர், ஆறுமுகன் தொண்டமான் வெளிநாடு பயணம்-

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை 2.55 அளவில் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.349 என்ற விமானத்தின் ஊடாக அவரும், அவரது பாரியாரும் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் அமெரிக்கா செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது இவ்விதமிருக்க முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான நேற்று அதிகாலை சென்னை புறப்பட்ச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை 6.45 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்171 விமானத்திலே அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 04.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதமளவில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவாகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இதன்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 இந்திய மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரங்களின் இலங்கைக்கான இராஜதந்திரிகள் ஆகியோர் இன்று நாட்டைவிட்டு சென்றுள்ளனர்.

செந்தில் தொண்டமானை கைதுசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்-

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தபாற்காரரான பெரியசாமி ஞானசேகரன், பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு திரும்பிகொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளானார். இச்சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும், தன்னுடைய கையடக்கத் தொலைபேசியையும் காணவில்லை என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை, செந்தில் தொண்டமானுக்கு எதிராக பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்கதெனியவுக்கு விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு-

புத்தளம் மாவட்டம் சிலாபம், பங்கதெனிய பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் அந்தப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில், அந்தப் பகுதியில் பிரபலமான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறிருப்பினும் இது தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்ற சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இதுவரை இரு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அரசியல் நியமனம்பெற்ற வெளிநாடுகளுக்கான தூதுவர்களை பதவிநீக்க நடவடிக்கை-

வெளிநாடுகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றுள்ள 48 தூதுவர்களை எதிர்வரும் மாதம் பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.