பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என ஹியூ ஸ்வைர் நம்பிக்கை-
புதிய அரசாங்கத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என தான் நம்புவதாக பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முதற்தடவையாக யாழ்ப்பாணம் சென்ற இவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சத்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். யாழ்ப்பாணத்தில் அவர் பிரிட்டிஷ் கவுன்ஸில், ஐக்கிய இராச்சியம் நிதியுதவி வழங்கும் ஹலோ நம்பிக்கை நிதியத்தின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள், ஆனையிறவு, சபாபதிபிள்ளை நலன்புரி கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார். வடமாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அதுமட்டுமன்றி மீண்டும் யுத்தத்துக்கு பலியாகக் கூடாதென்பதை வலியுறுத்தும் சின்னமாக ஆனையிறவுள்ளது என்றார்
இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை-
இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும். இலங்கையில் 10மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கிகாரத்தை பெறவேண்டும். இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டக்களப்பில் கவனயீரப்பு-
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது. இதில் ‘எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்’, ‘மகிந்த அரசில் காணமல் போனவர்களை மைத்திரி அரசே தேடித்தா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்குமாறு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.