100 நாள் திட்டத்தை செயற்படுத்த சகல கட்சிகளும் ஆதரவு-ஜனாதிபதி-
மனித உரிமைகளை பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்கும் விசேட கலந்துரையாடலில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவத்துள்ளார். 100 நாள் திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மக்களின் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாஸ், மஹிந்தானந்த உள்ளிட்டவர்களின் சொத்துக்களை பரிசீலிக்க அனுமதி-
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியான சஜின் வாஸ்குணவர்தன, துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியாத் பந்து விக்ரம மற்றும் அவர்களின் உறவினர்கள் அறுவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அரச, தனியார் மற்றும் 81 நிதிநிறுவனங்களில் விபரங்களை பெறவே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட, இரகசிய பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழே இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். பதவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்துக்குள் சேர்த்துகொண்ட சொத்துகள் மற்றும் நிதி விவரங்கள் தொடர்பில் பரிசீலனை நடத்தப்படும். வங்கி நிதி நிறுவனங்கள், இறைவரி திணைக்களம் மற்றும் காணி பதிவாளர் காரியாலயம் ஆகியவற்றிலேயேயும் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அதற்கும் நீதவான் அனுமதியளித்துள்ளார்.
வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற வர்த்தகர் கைது-
ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்டதாக கூறப்படும் வர்த்தகரொருவரை இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்துள்ளனர். மேலும் இவரிடம் இருந்த 8.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 20,800 யூரோ, 17,300 பிரிட்டன் பவுண் மற்றும் 24,000 சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணங்களை அவருடைய பையில் மறைத்து வைத்திருந்துள்ளார். தற்போது குறித்த நபர் 1 மில்லியன் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டன்பார் தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து-
நுவரெலியா, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், டன்பார் தோட்ட லயன் குடியிருப்பில் இன்றுகாலை 10.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 04 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. மேற்படி விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைதுள்ளதாகவும் இதன் காரணமாக வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த 4 வீடுகளிலும் குடியிருந்த 21 பேர் தற்போது தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டள்ளனர். மின்சார கோளறு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மாகாண அமைச்சர் ராம் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார். இதுகுறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் நடவடிக்கையை ஆராய்வதற்குத் தீர்மானம்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலின் போது அரச ஊழியர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களின் நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல் நாட்களிலும் தேர்தலிற்கு முன்னைய தினங்களிலும் ஆராயவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர் நிமல் புன்ச்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.