தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்பு மீறலல்ல-அமைச்சர் வாசுதேவ-
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என நேற்று சபையில் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அரசியலமைப்பு மீறல் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்போதே வாசுதேவ நாணயக்கார எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் அரசியலமைப்பின் தமிழ் மொழியாக்கத்தில் 205 ஆம் பக்கத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழி பெயர்ப்பை 1940 களில் நல்லதம்பி பண்டிதர் செய்தார். அவரது மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் இயற்றப்பட்ட தேசிய கீதத்தின் அர்த்தம் எதுவிதமான மாற்றமும் இல்லாமல் அனைத்து சொற்பதங்களும் தமிழில் அமைந்துள்ளது. சிங்களத்தில் ஸ்ரீலங்கா நமோ மாதா என்றும் அதேபோன்று தமிழில் நமோ நமோ தாயே என்றும் ஒரு பொருளில் அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சிங்கள இசை மெட்டுக்கு ஏற்ற வகையிலேயே தமிழிலும் உள்ளது. எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அது மட்டுமல்லாது அரசியலமைப்பிலும் தமிழில் உள்ளது. தமிழில் பாடுவது அரசியல் அமைப்பு மீறல் அல்ல. அது அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம். அதேபோன்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சிங்களத்திலும் தேசிய கீதத்தை பாடலாம். பெரும்பாலும் தேசிய நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகின்றது. நான் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக அந்த ஆட்சியில் இருந்த போது ஒரு யோசனையை முன்வைத்தேன். தென்னாபிரிக்காவைப் போல் இலங்கையிலும் தேசிய கீதத்தை சிங்கள தமிழ் சொற்பதங்களைக் கொண்டு சேர்த்து பாட வேண்டும் என. அப்போது தேசிய கீதத்தில் இரண்டு மொழிகளும் கலந்து விடும். ஆனால் அது நிறைவேறவில்லை. ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றும் போது அந்த உரையை தமிழில் மொழி பெயர்க்கின்றோம். எனவே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்தல் கூடாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விபூசிகா தாயாருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ப.ஜெயக்குமாரியின் மகளான விபூசிகாவை தாயாருடன் செல்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. புலிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் அவரது மகளான விபுசிகா நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கிளிநொச்சியில், இயங்கிவரும் மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார் விபுசிகாவை சிறுவர் இல்லத்தில் இருந்து பொறுப்பேற்பதற்கு அவரது தாயான ஜெயக்குமாரி கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஊடாக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இம்மனுமீதான விசாரணை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் விபுசிகா மற்றும் அவரது தாயார் ஆகியோர் ஆயராகி இருந்தார். ஜெயக்குமாரி சார்பாக ஆயரான சட்டத்தரணிகளான திருமதி. எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், சுந்தரேசசர்மா, துசியந்தி, றைகான், ஆகியோர் ஆயராகி குறித்த சிறுமியை பெற்றோருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். அதன்போது ஜெயக்குமாரியும் அவரது மகளான விபுசிகாவும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளதாலேயே குறித்த சிறுமி சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து விபுசிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் தேர்தல் ஆணையாளர் சந்ராநந்த காலமானார்-
முன்னாள் தேர்தல் ஆணையாளர் ஆர்.கே. சந்ராநந்த டி சில்வா காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமது 78வயதில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 1982ம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி இலங்கையின் தேர்தல் ஆணையாளராக பதவி ஏற்றார். அவர் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கான இலங்கையின் தூதுவராகவும் செயற்பட்டிருந்தார்.