Header image alt text

நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்தது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது-

arrest (30)யாழ். ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமைநேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தின்பேரில் நேற்று கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்று அவர்களது வீடுகளில் வைத்து கைதுசெய்துள்ளனர்.இருவரையும் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவரும் பொலிஸார், இச்சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை- தமிழக மீனவர்களிடையே பேச்சுவார்த்தை-

fishermen speakஇலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். மீன்வளத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக, இலங்கை மீன்பிடித்துறை இயக்குநர் பெர்னாண்டோ தலைமையில், மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சதாசிவம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், நேற்று சென்னை சென்றிருந்தனர். இரு நாட்டு மீனவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை வருகை-

qatar mannarகட்டார் நாட்டின் அமீர், ஷெய்க் தமீம் பின் ஹமட் – அல்- தானிஇலங்கையை வந்தடைந்துள்ளார். சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் ஆகியன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென தெரியவருகிறது. இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர். கட்டார் நாட்டின் அமீர் வருகையை முன்னிட்டு கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

19வது திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு-

ranilஇலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை- பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது. அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் விடுதலை-

fising (1)அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைதுசெய்யப்பட்டு 22ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தனர். அன்றே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர்கள் ஏப்ரல் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்திய, இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் இன்றைய தினம் குறித்த 21 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 21ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் மோதுண்ட யாழ். மாணவன் உயிரிழப்பு-

death (2)ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் மரணமடைந்துள்ளார் கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் கடக்கும்போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான 19வயமதன கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை-

சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளை பதவியிறக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்களுக்கு கொடுப்பனவு-

முன்னாள் பிரதமர்களுக்கு பல்வேறான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம், மாதாந்த கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படும்.

கைது செய்யும் வயதெல்லை நீடிப்பு-

குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்படும் வயது எல்லை 8 தொடக்கம் 12 வரை அதிகரிக்க சிறுவர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிறுவர் நீதிமன்றம், அரசாங்கத்திற்கு தற்போது யோசனை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் நடாஷா பாலலேந்திர தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.