லலித் குகன் தொடர்பில் அழைப்பாணை மற்றும் ஆர்ப்பாட்டம்-

arpattam2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார், நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதேவேளை, இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவரையும் அடுத்த தவணையில் மன்றுக்கு வருமாறு நாடாளுமன்றத்தினூடாக அழைப்பாணை விடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார். முன்னணி சோஷலிச கட்சியைச் சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி காணாமல் போனார்கள். அவர்கள் பயணம் செய்த மோட்டார் வண்டி, கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்பான தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை. இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள், யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கின் விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. வழக்கு விசாரணைகளின் போது, இருவரும் காணாமற்போனவர்களின் விவரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அரச தரப்பால் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்தன என அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதவான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவ்விருவரும் கடத்தப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள்’ என கூறியிருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். லலித் மற்றும் குகன் ஆகியோருடன் போராட்டங்கள், கூட்டங்களை நடத்தியபோது அவர்களுடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சாட்சியமளிப்பதற்கு இன்று ஆஜராகும்படி கூறியிருந்த போதும், அவரும் இன்று மன்றில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், கெஹெலியவையும் ஹந்துன்நெத்தியையும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதேவேளை கைதுசெய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். நகரில் இன்று நடத்தப்பட்டது. ‘தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?’, ‘லலித், குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்’, போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லலித், குகன் இருவரும் காணாமற்போய் மூன்றரை வருடங்கள் ஆகும் நிலையில் இருவருக்கும் என்ன நடந்தது என எந்தவொரு தகவலையும் அரசு வெளியிடவில்லை. லலித், குகன் மட்டுமல்ல, கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் என்ன ஆனார்கள் என இதுவரையில் எந்தவித தகவல்களையும் அரசு வெளியிடவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். தமது போராட்டம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.