த.தே.கூட்டமைப்புக்கான எதிர்க்கட்சி தலைவர் பதவியை தடுத்துநிறுத்த திட்டம் – ஜனா

janaஇலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் காணப்படும் நிலையில், அதை வழங்காமல்  தடுத்துநிறுத்துவதற்கு சிலர் திட்டமிட்டு வருகின்றார்கள் என்று கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.இந்த நாட்டில் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்,  தமிழ் மக்களுக்குரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.  தற்போது புதிய அரசு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் தேசிய அரசு நிறுவப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை ஏற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, அக்கட்சிகளுக்கு அடுத்தபடியாக உள்ள எமது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அதுவும் எமது தலைவர் இரா.சம்பந்தனே எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் பிரதமராக வரமுடியும். எமது கட்சி சார்ந்தோரால் பிரதமராக வரமுடியாவிட்டாலும், பிரதமருக்கு இணையான கருத்துக்களை சர்வதேச மட்டத்தில் கொண்டுசெல்ல முடியும். ஆனால், இவ்வாறான நிலைமை இந்த நாட்டில் தற்போதும் கூட இல்லாமலுள்ளது. 

தமிழர்களுக்குள்ளே பல கட்சிகள் இருந்தாலும், தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.  இதுபோன்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளும்  ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குரல் கொடுக்க முன்வர வேண்டும்’ என்றார.