Header image alt text

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை

saliya peirisஅரசியல் பேதங்களை மறந்து 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை அரசியலில் சுபீட்சமான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் சிறந்த ஆட்சிக்காகவும், 19வது அரசியலமைப்பு திருத்தம் அத்தியாவசியமானது என்று சங்கத்தின் உப தலைவர் சாலிய பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு விசேட கல்வி வலயங்களாக பிரகடனம்-

kilinochi mullaitivuகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளினது உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அத்துடன், சிவில் பாதுகாப்பு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

சோமவன்ச அமரசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்-

somawansaஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு விசுவாசமுள்ள அரசாங்கமொன்றை அமைக்கத் தாம் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தார்மீகப் பொறுப்புடைய அரசாங்கத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்மேளனக் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கவுள்ளோம். ஆயினும், நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுக்கு எந்த வகையிலும் எம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள கட்சி ஆதரவு தெரிவிக்காது என்று சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்றவர்களுக்கு எலக்ட்ரோனிக் அடையாள அட்டை-

oldageஓய்வு பெற்றவர்களுக்கான எலக்ட்ரோனிக் அடையாள அட்டை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அடையாள அட்டைகள் 1960ஆம் ஆண்டிலிருந்து பாவனையில் உள்ளன. ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்காக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம், காப்புறுதி தவணைக் கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களை எதிர்காலத்தில் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் செலுத்த முடியும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வூதியம் மாத்திரமன்றி, விதவைகள் மற்றும் தபுதாரர் கொடுப்பனவுகள் உட்பட சகல நவீன கொடுக்கல் வாங்கல் வசதிகளையும் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வனவாட்டுவுக்கு இலங்கை நிதியுதவி-

vanavattuwaசூறாவளியினால் பாதிக்கப்பட்ட வனுவாடு குடியரசுக்கு இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான பதில் உயர்ஸ்தானிகர் பி. செல்வராஜ். கென்பராவில் அமைந்துள்ள வனுவாட்டு உயர்ஸ்தானிகரை சந்தித்து இந்நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்நிதியுதவியை பாராட்டிய வனுவாட்டு உயர்ஸ்தானிகர் இருநாடுகளுக்கிடையிலான உறவு மேலும் மேம்பட இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவித்திருந்தார். வனுவாட்டுவில் கடந்த மாதம் இடம்பெற்ற வெப்ப மண்டல சூறாவளியில் 90 வீதமான வீடுகள் அழிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்-

ranil-mathriபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 07.40 அளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும் பிரதமருடன் மேலும் சில பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு ரணில் விக்கிரமசிங்க இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோவில் நிர்வாகத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தன.

முன்னாள் போராளியை காணவில்லை என முறைப்பாடு-

missingமுன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்ணண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என்றும் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் இன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ டிரக் விபத்தில் 17 இராணுவத்தினர் காயம்-

accidentஇராணுவ டிரக் வண்டியும் டிரக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து ஹிரிதலேயை நோக்கி பயணித்துகொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளலாய் பகுதியில் வெடி பொருட்கள் அபாயம்-

valalaaiயாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய தாம் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள்குடியேறி வருகின்றார்கள். தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிபொருட்கள் காணப்படுவதனால் தாம் அச்சத்துடனேயே துப்பரவு பணிகளை மேற்கொள்வதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எமது காணிகளை துப்பரவு செய்யும்போது வெடிக்காத நிலையில் எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் போன்ற வெடிபொருட்கள் காணப்படுகின்றன. நேற்று காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரியூட்டும்போது அதனுள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. கடற்தொழிலுக்கு செல்லும் வழியில் 5 எறிகணைகள் கடலினுள் காணப்படுகின்றது. அது தொடர்பில் வெடிபொருள் அகற்றும் பிரிவுக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து ஒரு வார காலமாகியும் அதனை அகற்றவில்லை. இதனால் கடலுக்குப் போக முடியவில்லை. எனவே, மீள்குடியேறியுள்ள பகுதிகளில் உள்ள வெடி பொருட்களை அகற்றி அச்சமின்றி வாழ வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர தேர்தல் முறை மாற்றம் துரோகச் செயலாகும்-மனோ கணேசன்-

manoஇந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல. உண்மையில் இது அதிகமாக தேவைப்பட்டது சில பெரும்பான்மை கட்சிகளுக்கும், சில பெரும்பான்மை சமூக அமைப்புகளுக்குமே. இதை நாம் புரிந்துக்கொண்டு, தேச நலன் கருதியும், ஐக்கியம் கருதியும் விட்டுக் கொடுப்புகளுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட்டோம். இவ்விதம் புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும், புதிய அரசாங்கத்தையும் உருவாக்க பெரிதும் துணை வந்த எமக்கு இன்று துரோகம் இழைக்க பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற சில சக்திகள் திட்டமிடுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றத்தை சட்டமூலமாக அவசர, அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது. இந்த அவசரம் இன்று அரசில் இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவிற்கே இருக்கின்றது. இது தொடர்பில் ஒரு அமைச்சரவை ஆவணத்தை இவர்கள் அமைச்சரவையில் சமர்பிக்க முயல்கிறார்கள். இதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள கூடாது. இதை அமைச்சரவையில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களும், தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு இடம்பெறும் சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து எமது ஒருமித்த முடிவையும், அடுத்த கட்ட நடவடிக்கையும் தீர்மானிக்க திட்டமிட்டுள்ளோம்.

Read more