வளலாய் பகுதியில் வெடி பொருட்கள் அபாயம்-
யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய தாம் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள்குடியேறி வருகின்றார்கள். தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிபொருட்கள் காணப்படுவதனால் தாம் அச்சத்துடனேயே துப்பரவு பணிகளை மேற்கொள்வதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எமது காணிகளை துப்பரவு செய்யும்போது வெடிக்காத நிலையில் எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் போன்ற வெடிபொருட்கள் காணப்படுகின்றன. நேற்று காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரியூட்டும்போது அதனுள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. கடற்தொழிலுக்கு செல்லும் வழியில் 5 எறிகணைகள் கடலினுள் காணப்படுகின்றது. அது தொடர்பில் வெடிபொருள் அகற்றும் பிரிவுக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து ஒரு வார காலமாகியும் அதனை அகற்றவில்லை. இதனால் கடலுக்குப் போக முடியவில்லை. எனவே, மீள்குடியேறியுள்ள பகுதிகளில் உள்ள வெடி பொருட்களை அகற்றி அச்சமின்றி வாழ வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.