தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதினக் கொண்டாட்டம் – யாழில் (படங்கள் இணைப்பு)
நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்திலிருந்து உலக தொழிலாளர் தினத்தை நினைவுபடுத்தும் ஊர்திகள் சகிதம் பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலம்; வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அங்கிருந்து பருத்துறை வீதி ஊடாக நல்லூர் ஆலயத்தை அடைந்து, பின்னர் ஆரியகுளம் சந்தியை அடைந்து, யாழ். நகருக்குள் வந்து காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.
வீரசிங்கம் மண்டபத்தில் தொடர்ந்து உலக தொழிலாளர் தினத்தை ஒட்டிய எழுச்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் எழுச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். மேற்படி கூட்டம் மாலை 6 மணிவரையில் நடைபெற்றது.வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் கூட்டுறவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்ததுடன் 5 மாவட்டங்களையும் பிரதான தொழில்களையும் பிரதிபலிக்கும் ஊர்திகளும் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டிருந்தன.