மே 19 யுத்த வெற்றி தினம், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக பெயர் மாற்றம்

ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில எதிர்ப்பு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்பு

fig-17இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல், முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த மே மாதம் 19 தேதியை யுத்த வெற்றி தினமென்று அறிவித்துக் கொண்டாடி வந்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய அமைச்சர் ராஜித்த சேனரத்ன, இலங்கையில் வாழும் ஒரு சமூகத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு தினத்தை யுத்தவெற்றியென்று கருதுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை மே மாதம் 19ஆம் தேதியை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக கொண்டாடுவதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்தார்.இதனடிப்படையில், பிரிவினைவாதத்தை தோற்க்கடிப்பதற்காக செயற்ப்பட்ட இலங்கை ராணுவத்தினரை கவுரவிப்பதற்கான நிகழ்ச்சியொன்றை மே 19 ஆம் தேதி மாத்தரை பகுதியில் நடத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாவும் கூறினார்.
அரசின் முடிவுக்கு எதிர்ப்பு:- அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஏற்க முடியாதென்று கூறினார் பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக ஏனைய இனத்தவர்களைவிட தமிழர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டனர். எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல என்று கூறிய அவர், யுத்த வெற்றியை கொண்டாடுவதன் முலம் சிறுபான்மை இன மக்களின் உள்ளங்கள் பாதிக்கப்படுமென்று அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியதென்று விமர்சித்தார். இந்த முடிவின் மூலம் தற்போதைய இலங்கை அரசின் தேசத்துரோகத் தன்மையே வெளிப்படுவதாக குற்றம்சாட்டி விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது இதற்கான தக்க பதிலடியை வழங்க தேசப்பற்றுள்ள மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்
வரவேற்கத்தக்கது – இரா சம்பந்தன்
தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகாமானதாகப் பார்க்கிறார். ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் , சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.