உயிர்நீத்தோர் நினைவாக வன்னியில் உதவிகள் வழங்கிவைப்பு-
பிரான்ஸில் வசிக்கும் தாமோதரம்பிள்ளை வரதராஜா குடும்பத்தினர் கடந்த 1985;ம் ஆண்டு திருகோணமலை பன்குளத்தில் வைத்து காடையர்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாய் மற்றும் சகோதரங்களான தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை, தா.பரமேஸ்வரி, தா.புவனேஸ்வரி(மதி), யோகநாதன், ஜெயபாலன் ஆகியோரது 30ஆம் ஆண்டு நினைவாக வன்னியிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. க.சிவநேசன் (பவன்) அவர்களின் ஊடாக நேற்று(24.05.2015) வழங்கிவைக்கப்பட்டது. இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கோழி வளர்ப்பிற்கென 10ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டது. இப்பெண்ணின் கணவர் இன்றுவரை தடுப்புமுகாமில் உள்ளார். மேலும் யுத்தத்தின்போது ஒரு காலினை இழந்து வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பெண்ணொருவருக்கு தன்னிடமுள்ள பணத்தையும் சேர்த்து மாடு வாங்கி வளர்ப்பதற்காக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயங்காத நிலையிலும் ஒரு கையினை இழந்த நிலையிலும் உள்ள ஒருவருக்கு மாடு வளர்ப்பிற்கென 20ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இவருடைய மனைவி இடுப்பின்கீழ் இயங்காத நிலையில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.