அம்பாறை மற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டங்கள்-
யாழ். புங்குடுதீவு மாணவியை படுகொலை புரிந்தவர்களுக்கு விரைவில் நீதி வழங்கக்கோரி பாரிய கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் வர்த்த நிலையங்கள், வங்கிகள் பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்ததுடன், திருக்கோவில் பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், விநாயகபும் சக்தி வித்தியாலய உயர்தர மாணவ, மாணவிகள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில்; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து, புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை தொடர்பில் அடையாள அணிவகுப்பு-
கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் 7வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 15 வயதுச் சிறுவனை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சிறுவன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரான சிறுவனை பொலிஸார் நேற்று கைதுசெய்தனர். யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், சிறுமி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கஹாவத்தை இரட்டைக் கொலை வழக்கில் மூவர் விடுதலை-
கஹாவத்தை, கொட்டஹதென்ன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என இன்று தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம்; அந்த மூவரையும் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகாத தென்னகோன், அந்த மூவர்மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதனால் அந்த மூவரையும் நிரபராதிகளாக விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய எல்.ஜீ.பிரேமவதி மற்றும் அவரது மகள் எச்.ஜீ.புஸ்பகுமாரி (வயது 23), ஆகிய இருவரும் கடந்த 2012 ஜூலை 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். குறித்த இரு பெண்களையும் கொலை செய்துவிட்டு அவர்களின் சடலங்களை எரியூட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் சமிந்த சில்வா, சிசிர குமார மற்றும் எல்.ஜீ.மித்தில ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றத்தை செய்வதற்கு உதவியவரின் சாட்சி, முன்னுக்கு பின் முரணானது. குற்றத்தை செய்வதற்கு உதவியவர் அரச சாட்சியாக மாற்றப்பட்டதன் பின்னர் அவரால் அளிக்கப்பட்ட சாட்சி முன்னுக்கு பின் முரணாகியமை, சாட்சியாளர்களின் அவநம்பிக்கையான சாட்சிகளின் பேரில் பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்குவது அபயகரமான நிலைமை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.