Posted by plotenewseditor on 1 June 2015
Posted in செய்திகள்
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட 34ம் ஆண்டு நினைவுதினம்-
இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 34ம் ஆண்டு நினைவு தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்நிகழ்வு ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகவும் இது கருதப்படுகிறது. 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூல்நிலையத்தை மறுநிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், அமைப்பினரும், சில தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். யாழ். பொது நூலகத்தை மறுநிர்மாணம் செய்வதற்கு பாடுபட்டவர்கள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே.
34ஆவது ஆண்டு நிறைவு நாள்-
தழிழினத்தின் வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள் 1981ம் ஆண்டின் வைகாசி 31ம் நாள் நள்ளிரவில் யாழ் நகரில் எங்கள் அறிவுக்கருவூலம் கருவறுக்கப்பட்டு கடையச் செருக்கர்களால் தழிழினத்தின்மீது பண்பாட்டுப் படுகொலை நிறைவேற்றப்பட்ட நாள். எமது இனத்தின் தனிப்பெருமையே கல்வி. அந்த கல்வியின் அடித்தளம எங்கள் யாழ்ப்பாண நூலகம். எங்கள் கல்வியின் தனிப்பெரும் தன்மையினை தாய் மண்ணில் அழித்திட அரக்கர் உருவத்தில்; அரசியல் வழிகாட்டலில் காடைத்தனம் நிறைவேற்றப்பட்டு கல்விக் கருவூலம் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட சாம்பலின் சிதறல்கள் எங்கள் இளைய இனத்தின் வலிகள் ஆக்கப்பட்டது அந்த வலிகளையே வரிகள் ஆக்கிய வேங்கைகள் காலத்;தினால் காடையர்களுக்கு இதுவே எமது இனத்தின் வீர வரலாறு என பாடம்புகட்டிய வரலாறுகள் பல. அழித்த கருவூலத்தின் நினைவுகளையும் வரலாற்றின் நிகழ்வுகளையும் என்றும் மனதில் கொண்டவர்களாக மீண்டும் என்றே எமது உரிமை பெறுவோம் என உறுதிபூண்டு. நினைவுகளுக்காக பிரார்த்திப்போம்.
என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை
இந்தியாவில் வெயிலின் கொடுமை, உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-
இந்தியாவில் நிலவும் கடும் வெப்ப காலநிலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 248ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒரிசா மாநிலங்களில் வெப்பம் காரணமாக அதிகளவிலானோர் பலியாகியுள்ளனர். நிலவும் அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு மக்கள் பலியாகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் வெப்பம் தாளாமல் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 677 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரிசா, குஜராத், ராஜஸ்தான், மற்றும் டெல்லியிலும் பலர் கடும் வெப்பத்தால் பலியாகியுள்ளனர். பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என மாநில அரசுகள் எச்சரிக்கை விடும் அளவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மே மாதம் இறுதியில் வெயில் கொடுமை குறையும் என எதிர்பார்ப்பதாக வானிலை தெரிவித்தது. ஆனாலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.