போரில் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு திறன் மிக்க செயற்கைக் கைகள்

artificial_arms artificial_arms1இலங்கையில் யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வொன்று முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (12.06.15) நடைபெற்றிருக்கின்றது.
ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தினர் யாழ்ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக இந்தத் திட்டத்தின் கீழ் கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பலர் வருகை தந்திருந்தனர். முழங்கைக்குக் கீழ் கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் பட்டிகளைக் கொண்டு பொருத்தப்படுகின்ற இந்தக் கைகள் ரோபோக்களின் கைகளைப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.முதற் தடவையாக வடமாகாணத்தைச் சேர்ந்த 150 பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக இந்தத் திட்டத்திற்கான தலைவரும், ரோட்டரிக்கழக உறுப்பினருமான சிவமூர்த்தி கிஷோக்குமார் தெரிவித்தார்.
இவற்றின் உதவியுடன் கை இல்லாதவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டவும், வாளிகளில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் செல்லவும் வசதியாக இருப்பதாக இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கையினால் பேனாவைக் கொண்டு எழுதவும் தங்களால் முடிந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர் செயற்கைக் கையானது மனிதரின் கைபோன்ற வடிவத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், அதன் எடை கூடுதலாக இருப்பதனால் கைகளில் பொருத்தப்படும் இடங்களில் வலி ஏற்படுவதுடன் வசதி குறைவாகவும், பயன்படுத்த முடியாமல் இருந்ததாகவும், ஆனால் ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன இந்தக் கையானது பாரம் குறைவாகவும் வசதியாக இருப்பதாகவும் பயனாளிகள் கூறினர்.
இந்தக் கைகளை செய்வதற்கு கையொன்றுக்கு 400 டாலர் செலவாவதாகவும், 150 பேருக்கான கைகளுக்கு 60 ஆயிரம் டாலர் செலவாகியிருப்பதாகவும் இந்தச் செலவை ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகம் முழுமையாக ஏற்று, இங்குள்ள பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கியிருப்பதாகவும் சிவமூர்த்தி கிஷோக்குமார் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள விசேட நிபுணர் குழுவொன்று பயனாளிகளுக்கு இந்தக் கைகளை மிகவும் குறுகிய நேரத்தில் பொருத்தியதாக கிஷோக்குமார் தெரிவித்தார். வழங்கப்பட்ட கைகளைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இங்குள்ளவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரண கைகளைவிட செயற்திறன் மிக்க இந்தக்கைகள் பிளாஸ்டிக்கினால் ஆக்கப்பட்டிருப்பதனால், இலகுவில் தீப்பிடிக்கக் கூடிய ஆபத்து இருப்பதாகவும், பயனாளிகள் அதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தின் முக்கியஸ்தரும், இந்தத் திட்டத்திற்கான தலைவருமான டெர்ரி டயலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.