Posted by plotenewseditor on 18 July 2015
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 18 July 2015
Posted in செய்திகள்
18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு – சம்பிக்க-
எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகள் நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார திட்டம் முன்வைக்கப்படும். ஓகஸ்ட் 18ம் திகதி உருவாக்கப்படும் அதிகாரத்துடன் கூடிய புதிய பாராளுமன்றில் விருப்புவாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும். நாட்டில் 17 பொருளாதார வலயங்களை உருவாக்குவதோடு 10லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வாக்குச் சீட்டு அச்சுடும் பணிகள் 10 மாவட்டங்களுக்கு பூர்த்தி-
2015ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, 10 மாவட்டங்களின் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதிமுதல் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10 மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதற்கிடையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டே அதிக நீளமான அமையும் என்றும் இது 29 தொடக்கம் 30 அங்குலங்கள் வரை நீண்டதாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
கிளிநொச்சியில் இளைஞர் குத்திக்கொலை-
கிளிநொச்சி சாந்திபுரம் பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்று தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றியதால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 28 வயதுடைய ராசலிங்கம் சாந்தரூபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.