லக்ஷ்மன் வசந்த பெரேரா பிணையில் விடுதலை-

vasantha pereraவிளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 250,000 ரூபா சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்வதற்கு மாத்தளை மாவட்ட மேலதிக நீதவான் சம்பத் கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு லக்ஷ்மன் வசந்த பெரேராவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு-

educationபுதிய ஆசிரியர் சேவை யாப்பின்படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் 75 வீதமான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை இம்மாதம் 31ம் திகதிக்குள் வழங்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார். அத்துடன் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 15,600 பேருக்கான பதவி உயர்வுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களில் 65 வீதமானோருக்கு இதுவரை பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உபாலி மாரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பை வீணடிக்கப் போவதில்லை-ஜனாதிபதி-

maithripala3வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கென உள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல் அழுத்தத்திற்கு உள்ளான யுகத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 பொருளாதார மாநாட்டுக்கு இணையான கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஜனவரி 8ம் திகதி மக்கள் வைத்த எதிர்பார்ப்பை ஒருபோதும் வீணடிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறிய 454 பேர் கைது-

election violenceதேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட 153 சுற்றிவளைப்புக்களில் சந்தேகத்தின் பேரில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 192 முறைப்பாடுகள் சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் 96பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 969 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது. தேர்தல்கள் திணைக்களத்திற்கு பதிவாகியுள்ள அதிகளவான முறைப்பாடுகள், சட்டங்களை மீறி போஸ்டர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாதைகளை ஒட்டுதல் சம்பந்தமாக என்பதுடன் அவை தொடர்பில் 216 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதுதவிர தேர்தல் வன்முறை சம்பவங்கள் சம்பந்தமாக 18முறைப்பாடுகள் மட்டுமே தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் கூறுகின்றது.

மாற்றத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை-அர்ஜூன-

arjunaஜனவரி 8ம் திகதி ஏற்படுத்திய மாற்றத்தை இனி எந்தவொரு அரசியல் சக்திக்கும் பின்னோக்கி மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். புதுப்புது தேர்தல் கோஷங்களை தயார் செய்துகொண்டு நாட்டை அழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என மஹர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். சிறுபான்மை அரசாங்கத்தை பெரும்பான்மை அரசாங்கமாக மாற்றும் தேர்தல் இது. கடந்த காலங்களில் அழிவை நோக்கிய நாடு சமீபத்திய ஆறு மாதங்களில் மாற்று திசை நோக்கிச் சென்றுள்ளது. அது இலகுவான காரியம் அல்ல. நாடு முழுக்க திருட்டு பரவியிருந்தது. அரச ஊழியர்களை தண்டிப்பது தவறு என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். பொலிஸ் நிதி விசாரணை பிரிவை அவர் அதிகாரத்திற்கு வந்ததும் கலைப்பதாகக் கூறுகிறார். நாட்டை அழித்த நபர்கள் மீதான விசாரணையை முடக்க அவர் முயற்சிப்பது புலப்படுகிறது. நாங்கள் திருப்பிய பயணத்தை மீண்டும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்போது நாட்டுக்கு உயிர்கொடுக்கத் தேவையில்லை. நாட்டுக்கு உயிர்வந்து பல காலமாகிவிட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.