சங்கானையில் ஞானம் பவுன்டேசன் நிறுவனம் மக்களுக்கு அடிப்படை வசதி-(படங்கள் இணைப்பு)
யாழ். சங்கானைப் பகுதியில் ஞானம் பவுன்டேசன் நிறுவனத்தினரால் மலசலகூடமற்ற வீட்டுக் குடியிருப்பாளர்கட்கு மலசலகூடங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக சங்கானை முருகமூர்த்தி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் மேடைக்கு மங்களவாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டனர். இவ் நிக்ழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உரையாற்றுகையில், எமது பிரதேசத்தில் இவ்வாறான மிக முக்கிய தேவையினை அறிந்து அதனை உரியமுறையில் நிறைவேற்றிய ஞானம் பவுன்டேசன் நிறுவனத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பிரதேசத்தில் இத்தகைய பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் அற்றநிலை காணப்படுகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது பிரதேசத்தில் காணப்பட்ட குடிநீர் வசதியீனம் மற்றும் திண்மக்கழிவுகள் அகற்றுவதில் உள்ள இடர் நிலைகள் தொடர்பில் காணப்பட்ட பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் பல அரச சார்பற்ற அமைப்புக்கள் மக்களுக்கு உதவி வருவதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அத்துடன் மக்களது உண்மையான தேவைகள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்று அதன்வழி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.