ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை புறக்கணிக்கிறதா த.தே.கூ?

sureshதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் தமது கட்சியை புறக்கணித்து செயற்படுவதாக, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

எனினும் குறித்த கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேசியப் பட்டியலில் உறுப்பினர்களைத் தெரிவு செய்த போதும் தமது கட்சியின் கருத்தினை கவனத்தில் கொள்ளவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தினம் தினம் இவ்வாறு செய்யின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பது குறித்து தமது கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு
 
epdpஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம். ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது முடிவு பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.

எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்
 
Ariyanendiranஎனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என்மீது அதிருப்தி இருக்குமானால் எனக்கு வாக்களிக்கவேண்டாம் என நான் மக்களிடம் தெளிவாக கூறியிருந்தேன். ஆனால் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் செயலாளர் புதியவர், பழையவர்கள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர். புதிய நடிகர்களை வைத்து படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.

அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர். எதிர்வரும் காலத்தில் நடக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எனது ஆட்சேபனையினை தெரிவிக்கவிருக்கின்றோம்.