சர்வதேச விசாரணை கோரி வடமாகாண சபையில் தீர்மானம்-

sivajiஇன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின. இந்நிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?, உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறி போராட்டத்தை கைவிடுமாறு கோரப்பட்ட நிலையில் அவர் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார். சபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அதனை எம்.கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.