இந்தியாவைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்: இரா சம்பந்தன்

sampanthanஇலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சம்பந்தர் தெரிவித்தார்.அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் தாம் முழுமையான ஆதரவை அளிக்கப்போவதாகவும், எதிர்க்கட்சிகளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து இயங்கப்போவதாகவும், செயல்திறன்மிக்க எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாகவும் சம்பந்தர் கூறினார்.

‘எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக உங்கள் அனைவருடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயங்க மாட்டோம். தேவையேற்படும் போதெல்லாம் அரசுக்கு எதிராக நாங்கள் திறமையானதொரு எதிர்க்கட்சியாக செயற்படுவோம்’, என்றார் சம்பந்தர்.

‘தமிழர் பிரச்சனைக்கு ஏற்கத்தக்க தீர்வு தேவை’

தேசிய நலனை முன் வைத்துத் தீர்க்கப்படவேண்டிய விவகாரங்கள் பல இருக்கின்றன என்று தெரிவித்த சம்பந்தர், தமிழர் விவகாரம் என்பது நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் புறையோடிப்போயிருப்பதாக கூறினார்.

இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அனைவருடனும் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

‘தமிழர்களின் பிரச்சனைக்கு ஏற்கத்தக்க தீர்வு காண்பது நம் அனைவரின் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்’, என்றார் சம்பந்தர்.

‘தேசிய அரசாங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட மசோதா குறித்து தமது கருத்துக்களை முன்வைத்த சம்பந்தர், இன்றைய காலகட்டத்திற்கு தேசிய அரசாங்கம் என்பது இலங்கையின் தேசியத் தேவை என்று வர்ணித்தார்.

இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதும், தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்பதும் தேச நலனுக்கு ஏற்றது என்றும், இலங்கையின் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்த சம்பந்தன், இலங்கை மக்கள் சமீபத்தில் அளித்த தொடர்ச்சியான இரண்டு ஜனநாயக தீர்ப்புகளுக்கு ஏற்பவே இது நடந்திருப்பதாகவும், அரசியல் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழும் இது சரியான செயல் என்றும் கூறினார்.

‘நடப்பவை எல்லாம் அவசியமானது மட்டுமல்ல, நாட்டுக்கு நன்மை பயப்பதுவும் கூட. இந்த அரசு வெற்றி பெற நாங்கள் வாழ்த்துகிறோம். ஆனால், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு ஒத்துப்போவதாக தெரியவில்லை. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமலே இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டிருக்கலாம்,’ என்றார் சம்பந்தர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்

துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பல்வேறு குயுக்தியான வழிகளைப் பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசியல் கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்துவருவதாக தெரிவித்த சம்பந்தர், எதிர்தரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதற்கான ஒரு வழியாகவும் இது பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

‘அண்டையில் இருக்கும் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கான அரசாங்கத்தில் 65 அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது’, என்றார் சம்பந்தர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசியல் கலாச்சாரம் தேச நலனுக்கும், தேசத்தின் தேவைக்கும் எதிராக இருப்பதாகவும் இதிலிருந்து இலங்கை விடுபடவேண்டும் என்றும் அதேசமயம், தற்போதைய சூழலில் எப்பாடுபட்டேனும் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டியது தவிர்க்கவே முடியாத அவசியம் என்பதையும் தான் உணர்ந்தே இருப்பதாகவும் சம்பந்தர் கூறினார்.

‘எல்லோருமே அமைச்சர்களாக வேண்டும் என்கிற தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். புதிய அத்தியாயம் ஒன்றை நாம் துவக்க வேண்டும். அண்டை நாட்டில் (இந்தியாவில்) எத்தனையோவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் அரச கட்டமைப்பு என்று வரும்போது ஒரே அரசாக ஒன்றிணைந்து செயற்படும் நல்லதொரு உதாரணத்தை நாமும் பின்பற்ற முயலவேண்டும்’, என்றார் சம்பந்தர்.

மத்தியில் ஏராளமான அமைச்சர்களை கொண்டிருப்பதற்கு பதிலாக, இலங்கையை இரண்டு அல்லது ஐந்து பிராந்தியங்களாக்கி, அவற்றுக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளிக்கலாம் என்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் மிகச்சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகச்சிறந்த முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்க வல்லவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அதிகாரம் கொடுத்து (பிராந்தியங்களில்) ஆளவிடலாம் என்றும் சம்பந்தர் யோசனை தெரிவித்தார்.

‘இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் அது ஒரே நாடாக இருக்கிறது. ஒன்றுபட்டும் இருக்கிறது. இந்தியாவில் மக்களின் மொழி, கலாச்சார மற்றும் மத உரிமைகளை மதித்து, கவுரவித்து பாதுகாக்கும் வகையில் மாநில அரசுகள் உருவாக்கப்பட்டிருப்பதே இந்தியா ஒரே நாடாக இணைந்திருப்பதற்கு முக்கிய காரணம். அதே அணுகுமுறையை நாமும் கடைபிடிக்கவேண்டும்’, என்றார் சம்பந்தர்.