பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவர் சக்தி செல்வராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களால் நகரசபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு கூட்டம் இடம்பெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் திரளாக வந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் தவிர கட்சித் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் தண்டாயுதபாணி, துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.