சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை-
திருகோணமலை சம்பூரிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை 30 வருடங்களின் பின்னர் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. சம்பூர் கட்டைப்பறிச்சான் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினையடுத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நேற்று முதல் சம்பூர் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பஸ், சம்பூரிலிருந்து இரவு பத்துமணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை 6மணிக்கு கொழும்பு கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தினை வந்தடைந்ததன் பின்னர் அங்கிருந்து வெள்ளவத்தையில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.
கொட்டதெனியாவ சிறுமி வல்லுறவுக்கு பின் கொலை-
கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. துணி ஒன்றினால் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பொலிஸார் அதிபர் விசாரணை குழுக்களை அமைத்துள்ளார்.
தொல்புரம் கலாயத்தில் 50 மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-(படங்கள்)
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பில் பேரில் வலி மேற்கு பிரதேசத்தின் தொல்புரம் பகுதியில் அமைந்துள்ள கலாலயம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வலி வடக்கு விழிசிட்டிப் பகுதியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஸ்ட வைத்திய நிபுணர் உயர் திரு.சி.நவரட்ணம் அவர்கள் அப் பகுதியில் வசிக்கின்ற பாடசாலை மாணவர்கள் 50 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் லண்டன் மாநகரில் பணியாற்றும் வைத்திய கலாநிதி. நவரட்ணம் கணேஸ், விரிவுரையாளர் திருமதி. கணேஸ் மற்றும் குறித்த அமைப்பின் நிர்வாகிகள் பெற்றோர்கள் ஆகியோரும்; கலந்து சிறப்பித்தனர்.