தமிழர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்-மோடி வலியுறுத்தல்-
அரசியலமைப்பொன்றின் மூலம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை ஐநா மனித உரிமைகள் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து இரு நாட்டுப் பிரதமர்களும் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் மேலும் கூறியதாவது, ஜெனிவா மாநாடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பயங்கரவாத ஒழிப்பில், இந்தியா உடன் இணைந்து செயல்படுவோம். பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான செயல்பாடு நிலவிவருகிறது. இலங்கை பாராளுமன்றத்தில், அனைத்து கட்சிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. முதல் பயணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்கு தான் வந்தார், நானும் முதல்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது, என ரணில் குறிப்பிட்டார். இதேவேளை இந்தியா – இலங்கைக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது. இலங்கை, இந்தியாமீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள மருத்துவனைக்கு, இந்தியா தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் அனுப்புவதில், இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும்இந்திய பிரதமர் கூறினார். அத்துடன் இலங்கையின் அனைத்து வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்பதற்கு உறுதியளிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர், இருநாட்டு மீனவ சங்க பிரதிநிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம். மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஏனெனில், இது அவர்களது வாழ்வாதார பிரச்சினை. இதேவேளையில், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தயாராகும்படி ஊக்குவித்து வருவதாகவும் ரணிலிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா – இலங்கை இடையே, நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் என்பவற்றை அடிப்படையாக கொண்டே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்;தக்கது.