‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐ.நா

unஇலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.
‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’
அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐ.நா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி விளக்கியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளது.
இலங்கையில் இந்த வன்செயல்களுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதாக கூறியுள்ள ஐநா அறிக்கை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும் இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சாதகமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷைத் ரா அத் அல் {ஹசைன் அவர்கள், ஆனால், இலங்கை, அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்