மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாது-மனித உரிமை ஆணைக்குழு-

deadஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தக் கூடாதென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனை தீர்வாக அமையாதென சர்வதேச ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு செயலாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். மேலும் சமூக, பொருளாதார, கலாசாரம் உள்ளிட்ட காரணிகளே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதென குறிப்பிட்ட அவர், அதற்கான காரணிகளை கண்டுபிடித்து தீர்வை பெறவேண்டுமே ஒழிய அதற்கு மரண தண்டனை தீர்வாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்த்து வந்த காரணத்தாலேயே மரண தண்டனை, கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமுல்படுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டோர் சார்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாராளுமன்ற அனுமதியை பெற்று மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.