கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-

4567676மட்டக்களப்பு, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடதாசி ஆலையில் இருந்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய படியே, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபரிடம் கையளித்தனர். அவர் குறித்த மகஜரை மேலதிக நடவடிக்கைக்காக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்தார். இதேவேளை இவ் ஊழியர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென்றும் இதனால் இவ் ஊழியர்களின் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கூட வசதி வாய்ப்பின்றி மிகவும் கஷ்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் அல்லது சுயவிருப்பில் அல்லாது கட்டாய சுயவிருப்பில் தங்களை அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கைகள் விடுக்கின்றனர்.