ஜனாதிபதி மைத்திரிபால இந்தியப் பிரமருடன் சந்திப்பு-
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா – இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வஷரூப் கூறுகையில், இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமது இணக்கத்தை வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி நேற்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.