லலித் வீரதுங்க, அனுச பெல்பிட்டவுக்கு நிபந்தனைப் பிணை-
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட ஆகியோர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குஸலா வீரவர்த்தனவால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ஷரூபா பணத்தில், நாட்டின் அனைத்து விஹாரைகளிலும் உள்ளவர்களுக்கு ´சில்´ துணிகளை பகிர்ந்தளித்தமை தொடர்பில், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைகளில் லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது இந்த வழக்கு தொடர்பில் அவர்களது அதி உச்ச ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும், சாட்சியாளர்களை அச்சுறுத்த மாட்டார்கள் எனவும், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். மேலும் அவர்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறும் கோரினார். இதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, ஒரு இலட்சம் ஷரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ஷரூபா சரீரப் பிணைகள் மூன்றில் இவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.
மாணவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாகக் கூட்டம் கூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 13 மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்;வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை விடுதலை செய்வது தொடர்பில் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்குமிடையில் நேற்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யுமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களில் ஈடுபடுவதில்லையென உறுதியளிக்குமாறும் மாணவர்களிடம் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். இதன்போது, அத்துமீறிய மற்றுமொரு மாணவர் குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்ட மாணவர்களையும் இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை-
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டு வேலை வாய்புக்காக பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் இடம்பெரும் பாரிய அளவிலான மோசடிக்கு எதிராக, பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்றையதினம் இடம்பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் குவைத் நாட்டுக்கு சென்ற 11 இலங்கையர்கள் அந்த நாட்டு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் சுற்றுலா விசாவில் வேலை வாய்ப்புக்காக சென்றமையே இதற்குக் காரணம். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அதிகாரிகளும் இதில் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனக பண்டார தென்னக்கோன் விளக்கமறியல்-
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 1999ம் ஆண்டு தம்புள்ளை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் ஜனக பண்டார கைதுசெய்யப்பட்டிருந்தார். கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்ததோடு, தொடர்ந்தும் அதே வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின்கீழ் அவரை சிகிச்சை பெற அனுமதித்தனர். இந்தநிலையில் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய இன்று சந்தேகநபரை விசாரிக்க குறித்த வைத்தியசாலைக்கு சென்றார். இதனையடுத்து அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஓசாமாவை கொன்றவருக்கு ஜ.எஸ் கொலை மிரட்டல்-
அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கவின் நேவி சீல் படையின் வீரர் ரோப் ஓநெய்லுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒசாமா பின் லேடனை நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்ற வீரர்களில் ஒருவரான நெய்ல் தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று பூட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவரை வேறு பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த அமெரிக்க பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குக்கான தொடரூந்து சேவைகள் இயல்புக்கு வந்தது-
தடைப்பட்டிருந்த வடக்குக்கான தொடரூந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பன்பொல மற்றும் கல்கமுவ தொடரூந்து நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி தொடரூந்து ஒன்று நேற்று தடம்புரண்டது. இதன் காரணமாக தொடஷரூந்து பாதையும் சேதமடைந்தது. இதனை அடுத்து கொழும்பு காங்கேசன்துறை மற்றும் கொழும்பு மன்னார் இரவு நேர இரு வழி அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், திருத்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்றுகாலை 5.45க்கு கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கான தொடரூந்து சேவை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டைய்யாவின் டீ.என்.ஏ பொருந்தவில்லை-
சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன்டேக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட டீ.என்.ஏ மாதிரி தொடர்பான அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மினுவான்கொட பிரதம நீதவானிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரிகள் கொண்டையாவின் டீ.என்.ஏவுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் கொடஹதெனியா பகுதியில் 5வயது சிறுமியான சேயா துஸ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர் கைதானதோடு தானே கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து குறித்த கொலை தொடர்பில் கொண்டைய்யாவின் சகோதரர் கைதுசெய்யப்பட்டார். Read more