பொறுப்புக் கூறலை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்-

hugo swireஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் பொறிமுறையை விரைந்து செயற்படுத்த வேண்டுமென பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அடுத்து வரும் வாரங்களில் இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போர் பல பேரழிவுகளின் பின்பு கடந்த 2009 ஆண்டு நிறைவுக்கு வந்தது. இப் போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக ஊடகங்களில் பல ஆவணங்கள் வெளியாகின. இதில் பாலியல் வண்புணர்வு, காணாமற்போதல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் என்பன மிகக் கொடூரமானவைகள். இதில் தெளிவாக இருக்கவேண்டும். இரு தரப்புகளும் கொடுமைகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையின் இறுதிப் போரில் போர் மரபுகள் பின்பற்றப்படவில்லை. பழைய காயங்களுக்கு வலி இருக்க முடியும் என்பது எமது சொந்த அனுபவத்தின் மூலம் தெரியும். ஆனால் அவர்களின் வலிகள் இன்னும் மோசமாக உள்ளன என்பதை எமது அனுபவம் காட்டுகிறது.
உண்மையான நோக்குடன் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு நம்பகமான செயல்முறையை ஏற்படுத்துவதன் மூலமே இலங்கை அதன் மகத்தான திறனை நிறைவேற்ற முடியும். அதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் 2012ஆம் ஆண்டு நான் அமைச்சுப் பதவிக்கு வந்ததிலிருந்து இலங்கையர்களுடன் நடந்த பல பேச்சுக்கள் மூலம் அது தெரியும். எனவே தான் இந்தப் பொறிமுறை மூலம் இலங்கையில் நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். அதனூடாகப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் 2013 ஆம் ஆண்டு எமது பிரதமர் டேவிட் கமஷரூன் உறுதியாக இருந்தார். எனினும் இலங்கை அரசு அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று தெளிவானபோது, நான் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ஜெனிவா சென்றேன். அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் ஆதரவான நாடுகளை எதிர்த்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது நல்ல அனுபவமாக அமைந்தது. 

இந்தத் தீர்மானத்தின் மூலமே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது இலங்கையின் புதிய அரசு நம்பிக்கையான செயல் முறையை முன்னெடுத்துள்ளமை நம்பிக்கையளிக்கின்றது. இந்நிலையில் நான் கடந்த மாதம் ஜெனிவாவுக்கு மீண்டும் சென்றபோது, இலங்கை குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மீண்டுமொரு தீர்மானத்தை கொண்டுவர முயற்சித்தோம். அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் ஆதரவு வழங்கியது. இதனால் அந்த பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவேண்டும். இது இலங்கை மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்குச் சட்டத்தின் ஆட்சியில் எதிர்காலத்தில் நம்பிக்கை உண்டாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கட்டம் சில நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதில் அரசியல் கைதிகளின் விடுதலை, ஊழல் மோசடிகளுக்கு சட்ட நடவடிக்கை, இராணுவ நடமாட்டம் மற்றும் தலையீட்டைக் குறைத்தல் போன்றவற்றை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும். இவை அவசியம் செய்ய வேண்டும். இலங்கையின் நம்பகமான செயல் முறைக்குப் பிரிட்டன் தனது பூரண ஆதரவை வழங்கும். இது தொடர்பில் இலங்கை அரசுடன் பிரிட்டன் அடுத்த வாரங்கைளில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது. நான் 2013ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது பல குடும்பங்களைச் சந்தித்தேன், அவர்கள் தமது உறவினர்களைக் காணவில்லை என என்னிடம் முறையிட்டனர். தமது உறவுகள் உயிருடன் இருப்பது கூடத் தெரியாது எனச் சுட்டிக்காட்டினர். எனவே சில சந்தர்ப்பங்களில் அவர்களின் தேடுதலுக்கு நீதி வேண்டும். ஆனால் அவற்றுக்கு மேலாக அவர்களுக்குப் பதில் கொடுக்க வேண்டியிருந்தது. ஐந்தாயிரம் மைல்கள் தாண்டி ஜெனிவா சென்று இரண்டாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். எனவே அவற்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதன் மூலமே நீண்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என்றார்.