கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் விழாவும், கௌரவிப்பு விழாவும்-
யாழ். கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும், உதவித் திட்ட நிகழ்வும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களுடைய சேவைக்கான கௌரவிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது. பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்கள் அந்தப் பகுதியிலே இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவிலே உதவி வருகின்றவர். மேற்படி கழகத்தின் விழாவும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களின் கௌரவிப்பு விழாவும் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் தலைவர் செ.ஜெகபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், திரு. சிவலிங்கராஜா (பேராசிரியர், யாழ். புல்கலைக்கழகம்), திருமதி ரி.ஆன்னலிங்கம் (பிரதேசசபை செயலாளர் நல்லூர்), திரு. கிருஸ்ணராஜா (வரலாற்றுத்துறைப் பேராசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.நிகழ்வில் வரவேற்புரையினை திரு பிறேம்குமார் (ஆலோசகர் மக்கள் நலன்பேணும் கழகம்) நிகழத்தினார். இந்நிகழ்வின்போது தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கல்விக்கான நிதியுதவியும், கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கான நிதியுதவி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் சேவையினை கடந்த மூன்று வருட காலமாக கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தினர் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.