முல்லைத்தீவு வசந்தபுரத்தில் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மன்னகண்டல் வசந்தபுரத்தில் வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (04.11.2015) காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் வன்னி மேம்பாட்டுக் கழக முக்கியஸ்தர்களினால் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு நல்லினக் கறவை மாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறு ஆறு குடும்பங்களுக்கு ஆறு கறவை மாடுகள் காப்புறுதியுடன் வழங்கிவைக்கப்பட்டன. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் தோழர் மாசிலாமணி மகேந்திரராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் திரு. தவராஜா, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளர் செல்வி ராஜலட்சுமி, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் மத்தியகுழு உறுப்பினர்கள், கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை சங்கத் தலைவர் மற்றும் காப்புறுதி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இதன்போது வசந்தபுரத்திலுள்ள ஆரம்ப பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. மேற்படி வசந்தபுரம் கிராமம் 1977ம் ஆண்டு கலவரத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும்.