கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)
யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.வேல்அழகன் அவர்களுடைய தலைமையில் நேற்றுக்காலை 9மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக திரு. தயாபரன் (யாழ். வலய தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி), அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு. சிவலிங்கம் (கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர்) மற்றும் திருமதி எஸ்.வாகீசன் (அதிபர், கரந்தன் ராமுப்பிள்ளை வித்தியாலயம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளுடன்; பாடசாலையின் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து கொட்டும் மழைக்கும் மத்தியில் இந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதன்போது பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியானது கடந்த காலங்களிலே குடாநாட்டிலுள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கியது. ஆயினும் யுத்த சூழ்நிலைகள் காரணமாக ஏற்பட்ட பெருந்தொகையானவர்களின் இடம்பெயர்வுகள் மாத்திரமன்றி பெரும்பான்மையான வசதிபடைத்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை நகர்ப்புறப் பாடசாலைகளில் இணைக்கின்றமையும் கிராமப்புறப் பாடசாலைகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. கிராமப்புறப் பாடசாலைகளும் நகர்ப்புறப் பாடசாலைகளின் தரத்திற்கு சமனாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி அதிகாரிகள் ஆகியோரது முயற்சிகள் மாத்திரமல்ல பெற்றோர்களுடைய பூரண ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. அப்போதுதான் கிராமப்புறப் பாடசாலைகள் நகர்ப்புறப் பாடசாலைகளின் தரத்திற்கு வளர்ச்சியடையும். அது புpள்ளைகளை சரியாக கண்காணித்துக் கொள்வதற்கும் அதேநேரம் கிராமத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.