யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று தோழமை தினம் இடம்பெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களாலும், ஈ.பி.ஆர்.எவ்.எவ்-பத்மநாபா கட்சியினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களது தலைமையில் இன்றுமுற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிவரையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறீகாந்தா, முருகேசு சந்திரகுமார், வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), ஜி.ரி. லிங்கநாதன் (விசு), வட மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராஜா ஆகியோரும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இங்கு உரையாற்றிய அனைவரும், தமிழ் கட்சிகள் மத்தியிலே குறைந்தபட்சம் ஒரு ஒற்றுமைப்பாடு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற தொனியில் உரையாற்றினார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.