இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்-மலேசிய எதிர்க்கட்சிகள்-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மலேஷிய தலைநகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம் இலங்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மேம்படுவதற்கு இந்தியா அழுத்தம் விடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இதன்போது வலியுறுத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இதயசுத்தியுடன் நிறைவேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அதனை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமு எனவும் மலேஷிய தலைவர்கள் கோரியுள்ளனர். அத்துடன் நீண்டகாலமாக சிறைச்சாலையில் வாடும் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பிலும் மோடியிடம் விவாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜி.எல்.பீரிஸ் மீது நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு விசாரணை-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணை பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 1மணியளவில் முன்னாள் அமைச்சர் விசாரணை பிரிவிற்கு ஆஜராகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான நேரடி பஸ்-
திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. சேருவிலையில் முற்பகல் 11 மணிக்கு தயாராகும் பஸ் மூதூரிலிருந்து நண்பகல் 12 மணிக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென்று இலங்கை போக்குவரத்து சபையின் மூதூர் சாலை முகாமையாளர் ஏ.எல் நௌபீர் குறிப்பிட்டிருந்தார். மேலும் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நண்பகல் 01 மணிக்கு மூதூருக்கான பஸ் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். 350 ரூபா போக்குவரத்து கட்டணத்துடன் சாதாரண சேவை இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தோழர் சுப்புவுக்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)
தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதி தோழர்களால் அமரர் தோழர் சுப்புவுக்கு தோழர் சின்னக்குமார் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் சுழிபுரம் பகுதியில் கடந்த (08.11.2015) அன்றுமாலை நடைபெற்றது. முன்னதாக இவ் நிகழ்வின்போது தோழர் சின்னக்குமார் அவர்கள் அமரர் தோழர் சுப்புவின் திருவுருவப்படடத்திறற்கு மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து ஏனைய கழகத்தின் மூத்த தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வின் பின்னர் அஞ்சலி உரையினை தோழர் ஜெகநாதன் (ஜேர்மனி), புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாhளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தொலைபேசி ஊhக இரங்கல் உரையினை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் அமரர் தோழர் சுப்புவின் நினைவாக சுழிபுரம் பகுதியில் தோழர் அன்டனி அவர்களின் தலைமையின்கீழ் 500பனை விதைகள் நாட்டத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.