சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-

samantha_maiththiri_001ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர், இதனை ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகுமென குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்ததாகும். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை பாராட்டுகின்றேன். அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகமின்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட தூதுவர், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியுமெனத் தெரிவித்தார். இலங்கையின் புதிய வேலைத்திட்டம் பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறுகையில், இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகள். அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது. நல்லிணக்க செயன்முறையானது, உண்மையை ஆராய்தல், நியாயம் வழங்குதல், இழப்புக்களை ஈடு செய்தல், மீண்டும் அவை ஏற்படுவதை தடுத்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. நீண்டகாலமாக நெருக்கடிக்குள்ளாகி உள்ள நாடு என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளின்போது பல்வேறு கருத்துக்களைக்கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. அங்கு மேலெழும் கருத்துக்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவுகின்றது. அதன்போது அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது. நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த 10 மாதங்களுக்குள் அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்திடமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளது. நல்லிணக்க வேலைத்திட்டத்தை அடைந்துகொள்வதில் இலங்கை மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பாக, வடக்கில் காணிகளை விடுவித்தல், மீளக் குடியமர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் போன்று, மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று தெரிவித்தார்.