ஏழாலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)
யாழ். ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பிள்ளைகளுக்காக இலவச பிரத்தியேக வகுப்புக்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்பிள்ளைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவது குறித்து புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய லண்டனில் வசிக்கும் கழகத் தோழர் திரு. வேலாயுதம் மணிவண்ணன் அவர்களின் அனுசரணையில் மேற்படி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. திரு. சபேசன் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதா அவர்களது தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஆசிரியர் கேதீஸ்வரன், திரு மணிவண்ணனின் சகோதரர் ஹரிவண்ணன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,புலமைப்பரிசில் பரீட்சை உண்மையாக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் இன்றைக்கு முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், கிராமப்புற பாடசாலைப் பிள்ளைகளுக்கு நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய பெரிய பாடசாலைகளில் அல்லது மகாவித்தியாலயங்களில் அனுமதி பெறுவதாகவே இருந்தது. இதற்காக நடாத்தப்படும் ஒரு பொதுப் பரீட்சையாகவே அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இது ஒரு கௌரவப் பரீட்சையாக அதுவும் முக்கியமாக பெற்றோருக்கான ஒரு கௌரவப் பரீட்சையாக பார்க்கப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் இந்தப் பரீட்சையை பிள்ளைகள் திறம்பட செய்ய வேண்டும். இதற்காக திரு. மணிவண்ணன் அவர்கள் செய்கிற உதவிகளுக்கு நன்றிகூறி பாராட்டுகின்றேன் என்றார்.