வடக்கில் இந்திய நிதியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை கட்டிடம்.

hospitalவட மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 200 படுக்கை வசதிகளையுடைய வைத்தியசாலை விடுதிக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படுவதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
வவுனியா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது கட்டமாக மருத்துவ உபகரணங்ள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றையும் நோயாளர் விடுதிக் கட்டிடத்திற்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற குழுவினர் இரு பெண்கள் பலியாகியுள்ளனர்.

riverஇறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை (13) 04.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். 26 வயதான ஆசிரியர் ஒருவரும் 33 வயதான தாதி ஒருவருமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

புத்தளம் – அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர், திரும்பும் வழியில் இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் நீராடி விட்டு வெளியே வந்த பின்னும் குறித்த இரு பெண்களும் நீண்ட நேரம் நீரில் இருந்துள்ளனர்.

இதன்போது திடீரென ஆற்றின் நீர் மட்டம் அதிகரிக்க இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றையவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், இவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இந்தநிலையில் இருவரது சடலமும் இன்று காலை (14) கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா- பாக். நட்புறவு தான் தெற்காசியாவுக்கு நல்லது – சுஷ்மா

indian_pakistanஇந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில் நட்புறவற்ற போக்கு தொடர்ந்தும் நீடிக்குமானால் தெற்காசிய பிராந்தியம் அமைதியாகவும் செழிப்புடனும் இருக்க முடியாது என்பதை இரண்டு நாடுகளுமே உணர்ந்துள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் பாகிஸ்தானில் நடத்தியிருந்த பேச்சுக்கள் தொடர்பில் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
சர்ச்சையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்குவதற்கு இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் நடந்த தாக்குதல்களை அடுத்தே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
உறவுகள் முன்னேறுவதில் பயங்கரவாதமே தடைக்கல்லாக இருப்பதாக ஸ்வராஜ் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையை பாகிஸ்தான் தான் ‘தீர்க்க’ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யேமென் சண்டையில் சவுதி , எமிரேட்ஸ் தளபதிகள் பலி

jemanயேமனில் {ஹத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டு படையினரில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வரும், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தங்கியிருந்த முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்களில், சூடானியப் படையினர் ஒருவரும் அடங்குவார். யேமன் அரசாங்கத்திற்கும் {ஹத்தி கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

யாழில் 39,300 வீடுகள், 32,017 மலசலகூடங்கள், 13,711 கிணறுகள் தேவை

jaffnaயாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முழுமையாக 39,300 புதிய வீடுகளும், 32,017 மலசல கூடங்களும், 13,711 குடிநீர் பெறும் கிணறுகளும் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான நகரத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்கள், மீள்குடியேறவுள்ள மக்கள், நலிவடைந்த மக்கள், மற்றும் பொதுவாக அமைக்கப்பட வேண்டியுள்ள வீடுகள், மலசலகூடங்கள், நீர் வசதிகள் தொடர்பான மதிப்பீட்டு தரவுகளில் இது குறித்துக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்காக 14,391 புதிய நிரந்தர வீடுகளும், பகுதியளவு திருத்த வேலைப்பாடுகளுடன் 3,512 வீடுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது. 11,329 புதிய மலசலகூடங்களும், விசேடதேவைகளுடன் கூடிய 412 மலசல கூடங்களும், திருத்த வேலைப்பாடுகள் அடங்கிய 1,670 மலசலகூடங்களும் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
அத்துடன் 5,235 கிணறுகளும், 1,667 குழாய்க் கிணறுகளும், திருத்த வேலைப்பாட்டுடன் கூடிய 376 கிணறுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
இதேவேளை இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத மக்களுக்கான நிவர்த்தி சேர் தேவைகளில் 9,457 புதிய வீடுகளும், 9,254 புதிய மலசல கூடங்களும், விசேட மற்றும் திருத்த வேலைகளுடன் கூடிய 18 மலசலகூடங்களும், 109 புதிய கிணறுகளும், 69 குழாய்க் கிணறுகளும், 3,927 புனரமைப்பு செய்யப்பட வேண்டிய கிணறுகளும் உள்ளடங்கியுள்ளன.
நலிவடைந்த மக்களுக்காகப் புதிதாக அமைக்கப்பட வேண்டியனவாக 15,452 வீடுகளும், பகுதியளவு திருத்த வேலைப்பாட்டுடன் கூடிய 5,243 வீடுகளும், புதிதாக அமைக்கப்பட வேண்டிய 11,434 மலசல கூடங்களும், விசேடமாக அமைக்கப்பட வேண்டிய 134 மலசல கூடங்களும், திருத்த வேலைப்பாடுகள் நிறைந்த 968 மலசல கூடங்களும் காணப்படுவதுடன், புதிதாக அமைக்கப்பட வேண்டிய மற்றும் திருத்த வேலைப்பாடுகளுடன் கூடிய 11,129 கிணறுகளும் அமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைவிடப் பொதுவான தேவைகளுக்காக 168 புதிய மலசல கூடங்களும், 36 திருத்தப்பட வேண்டிய மலசலகூடங்களும், 203 புதிய கிணறுகளும், தேவையாக உள்ளதுடன் 295 கிணறுகள் திருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன.