சுழிபுரத்தில் தோழர் சுப்புவுக்கு அஞ்சலி நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
வலிமேற்கு பிரதேச ஆதரவாளர்களால் அண்மையில் ஜேர்மனியில் அமரத்துவமடைந்த தோழர் சுப்புவுக்கு (கார்த்திகேசு சிவகுமாரன்) கடந்த 13.12.2015 அன்று சுழிபுரத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், வலிமேற்கு பிரதேசசெயலக கிராமசேவை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தோழர் சுப்புவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி நினைவுச்சுடரினை ஏற்றி வைத்ததைத் தொடந்து கழகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தோர் மலர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் நிகழ்வினைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல் திட்டத்தின்கீழ் தோழர் சுப்புவின் ஞாபகார்த்தமாக கழகத்தின் ஜெர்மன் கிளை தோழர்களது உதவியுடன் 5 பாடசாலை மாணவர்கட்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் நிகழ்வினை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தோழர் சுப்புவின் உறவினர்கள் மற்றும் கழகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் தோழர் யாதவன் ஆகியோர் துவிச்சக்கர வண்டிகளை மாணவர்கட்கு வழங்கி வைத்தனர். இவ் நிகழ்வினைத் தொடந்து ஜேர்மனிய புலம்பெயர் உறவான திரு.ஆறுமுகம் இராஜரட்ணம் அவர்களால் பெண் தலைமைத்துவ குடும்ப மேம்பாட்டிற்காக அனுப்பிவைக்கப்பட்ட ரூபா.50,000 பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கழகத்தின் ஜேர்மன் கிளை தோழர்களின் உதவியுடன் தோழர் சுப்புவின் நினைவாக 100 பாடசாலை மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலிமேற்கு மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், வலி மேற்கு பிரதேச செயலக கிராமசேவை உத்தியோகஸ்தர்கள் கழகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் யாதவன், கண்ணன், ஜீவராஜா, குமார், சிவநேசன் ஆகியோரும் மாணவர்கட்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்வின் இறுதியில் பொதுமக்களுக்கு 100 தென்னங்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன