வவுனியாவில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்மீது தாக்குதல்-
வவுனியா தர்மலிங்கம் வீதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் வவுனியா நகர சபையினரால் இன்று முற்பகல் அகற்றப்பட்டது. இதன்போது நகர சபை ஊழியர்களுக்கும், வர்த்தக நிறுவனத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை படம்பிடித்துக் கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன்மீது வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் புகைப்படக்கருவிக்கும் சேதம் விளைவிக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து, நகரசபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தாக்குதலாளிகளிடம் இருந்து ஊடகவியலாளரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஊடகவியலாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெயப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகின்றது. வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.