வறக்காபொல வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு-
வரகாபொல – தும்மலதெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் குழந்தை இன்று மதியம் உயிரிழந்துள்ளது. விபத்துக்குள்ளான வேனில் இருந்த ஒரு வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தின்போது வேனில்; பயணித்த 5 பேரே பலியாகியுள்ளனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸ{ம், சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த வானுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கடவுச்சீட்டை பெறுவதற்கே சம்மாந்துரையிலிருந்து அவர்கள் வானில், பயணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடை கடத்தல், இருவர் விளக்கமறியலில், ரவீந்ரவுக்கு விளக்கமறியல்-
கொழும்பு தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து முன்னதாக நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில், குறித்த இருவரும் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை கொலன்னாவை நகர முதல்வர் ரவீந்ர உதயசாந்தவை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பு குறித்து கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முன்கூட்டியே சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்களை கடந்த தினங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவி;த்துள்ளார்.
நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்- குமார் குணரட்னத்துக்கு விளக்கமறியல்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 8ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் ஏ.எம்.எம் ரியாலினால் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,.
புதிய ஆண்டே புதிய பாதையினை நம்பிக்கையுடன் காட்டிடு-
பிறக்கின்ற புதிய ஆண்டாகிய 2016ம் ஆண்டு எங்கள் இன்னல்கள் பல அகன்று விடுதலையின் வித்துக்களின் இலட்சிய கனவுகள் நனவுகள் ஆகிட புதுமையான காலமிது தழிழர் தேசத்திற்கு என பார் எங்கும் போற்றிட சிறைகளில் சிறகிழக்கப்பட்டு உள்ள எம் உறவுகள் வெளிவந்திட, காணாமல் போனரது உறவுகளின் கண்களின் செந்நீருக்கு சிறந்த தீர்வுகள் கிடைத்திட., களையப்பட்டு விரப்பட்டப்பட்ட எம் இனத்தவரது உயர் உழைப்பின் செந் நிலங்கள் எதிரியின் நிழல்களில் இருந்து விடுதலை பெற்றிட, திட்டமிட்டு அழிக்கப்படும் எம் இனத்தின் கால வரலாற்று தடயங்கள் மீண்டும் நிலை பெற்றிட, கூறப்பட்ட நல்லாட்சி மெய்பட்டிட, எம் இனத்தின் துரோகிகளினதும் எதிரிகளினதும் வஞ்சகச் செயல்கள் எரிந்து சாம்பலாகிட, பகைமைகளையும், குரோதங்களையும் மறந்தவர்களாய் விடுதலை மறவர்களின் தியாகத்தின் ஒப்பற்ற தன்மையினை உணர்ந்தவர்களாய் இவ் புதிய ஆண்டில் புதிய பாதையில் கைகோர்த்து இது தழிழர் யுகம் என ஒன்றிணைந்து வெற்றி நடை போட்டிட ஒன்றிணைவோம் வாரீர்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலிமேற்கு பிரதேசசபை.
வலி வடக்கு, கிழக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-
வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில்சென்று பார்வையிட்டனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தைமாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் நேற்று மீள்குடியேற்றதுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வளலாய் பகுதி அதாவது வலி.கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.