புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மஹிந்தவின் அறிவுரை
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு கட்டங்களாக இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ள அவர், முதல் கட்டமாக நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படுதல் மற்றும் தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியன இடம்பெற்ற பின்னரே ஏனைய நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் புதிய அரசியலமைப்பு தொகுக்கப்படும் போது, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் செயற்படுத்த முடியாத பகுதிகள் நீக்கப்பட வேண்டும. அதிகாரங்கள் பகிரப்படும் போது உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற கீழ்மட்ட அமைப்புக்கள் பற்றி நீண்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதன் கீழ் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தேர்தல் ஒன்று நடத்தப்படுவது பொருத்தமானது என்றும். நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற சொற்பொழிவின் போதே அவர் இவற்றை கூறியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்க சர்வதேச மட்டத்தில் போட்டி நிலவுகிறது
புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகவும்.
இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலமையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதற்கு சர்வதேச நாடுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாகவும். சிறந்த அரச நிர்வாகம் மற்றும் சிறந்த வெளிநாட்டு கொள்கையுமே இதற்கு காரணம் என்றும் .
ஜேர்மனி அரசாங்கத்தினால் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யமாறு இந்த நாட்டு அரச தலைவர் ஒருவருக்கு 43 ஆண்டுகளின் பின்னர்,முதற்தடவையாக உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார்.
காணாமல்போனோர் தொடர்பான பிரதமரின் கருத்துக்கு பிரஜைகள் குழு கண்டனம்
இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் கண்டித்திருக்கின்றனர்.
பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பொங்கல் விழாவில் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போனவர்கள் பற்றிய பட்டியலை தயாரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
‘எங்களுடைய அந்தப் பட்டியலில் விபரம் இல்லாவிட்டால் காணாமல்போயிருப்பவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்று உயிருடன் இல்லை என்பதைத் தெரிவிப்பதில் கவலையடைகிறேன். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அத்தகைய நிலைமைக்கு இடமிருக்கின்றது’ என்றார் ரணில்.
பிரதமரின் இந்தக் கருத்து காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் தங்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும். காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்கள் பிரதமருக்கு தெரிந்திருக்கின்றது என்ற சந்தேகம் காணாமல்போயிருப்பவர்களின் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள சகாயம், இதுபற்றிய விபரங்களை பிரதமரிடமிருந்து தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கத்தல் அரபு நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சி
இரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபியப் பங்குச் சந்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அரபு உலகில் பல நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது
அரபு உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையான சவுதி அரேபியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் மற்றும் துபாய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டன.இதனிடையே இரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பாரல்கள் அதிகரிக்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது. இரானின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கவுள்ளது
அப்படி இரான் தனது நாளாந்த எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்குமானால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைய வழி வகுக்கும்.
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் இப்போது 29 டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது.
நாற்பது ஆண்டுகளாக இரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி மீதிருந்த தடை காரணமாக இரானுக்கு இதுவரை 160 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.