லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-
நேற்றையதினம் (03.02.2016) லண்டன் Eastham நகர மண்டபம் Council Chambersஇல் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Eastham உப நகரபிதா திரு. போல் சத்தியநேசன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த ஒன்றுகூடலில் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினராலும் மண்டபம் நிறைந்திருந்தது.
திரு. போல் சத்தியநேசன் அவர்கள் இங்கு உரைநிகழ்த்துகையில், தன்னை உதாரணமாக குறிப்பிட்டு பலரின் வாழ்விற்கு London PLOTE வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளை குறிப்பிட்டார்.
தோழர் சபா சுகந்தன் அவர்கள் கூட்டத்தினை ஒழுங்கமைத்து வழங்கினார்.
தொடர்ந்து கேள்விகளுக்கு தெளிவானதும், தீர்க்கமானதுமான பதில்களை தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கியமை குறித்து பலராலும் பாராட்டப்பட்டார்.
அத்துடன், இலங்கையில் சிறார்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தனிப்பட்ட முறையிலேனும், போரினால் பாதிக்கப்பட்டு இன்னமும் வாழ்க்கைக்கு போராடும் போராளிகளின் குடும்பங்களை வாழவைக்க முன்வருமாறும், போராட்டத்தின் பெரும் உந்துகோலாக இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் அதே வேகத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தோழர் சித்தார்த்தன் அவர்களது நீண்ட உரையில், போரின் அவலங்கள், அரசியல் தீர்வு முயற்சிகள், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசின் செயற்பாடுகள், அக புற சூழ்நிலை, பெரும்பான்மை மக்களின் மனோநிலை, முன்னைய அரசின் தலைமை வழங்கும் அழுத்தங்களினால், புதிய அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சவால்கள் என சகல விடயங்களையும் விபரித்தமை, கேள்விகளுக்கு இடமின்றியே போதிய விளக்கங்களை தந்திருந்ததாக அமைந்தது.
மேலும் 2016ம் ஆண்டு எமது இனப்பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் மிக முக்கியமான ஆண்டாக அமையலாமெனவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி(SLFP) ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை இடம்பெறாது எனவும் எனவே இதுவே பிரதான பெரும்பான்மைக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கான இறுதி சந்தர்ப்பமாக இருக்குமெனவும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் சார்பில் ஒரு வலுவான அமைப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக வலியுறுத்தினார்.
இறுதியாக சிரேஷ்ட தோழர் கேசவன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.