உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பா.உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு
கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டிருந்தார்.உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நான்கு கைதிகள் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர். தங்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், கௌரவ சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் புதிய மகசின் சிறைச்சாலைக்கு இன்றுமுற்பகல் விஜயம் செய்து உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களது விடுதலைக்கு உரிய தரப்புக்களுடன் தொடர்ந்தும் பேசி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.