வவுனியாவில் சாரணர் இயக்க ஸ்தாபகர் தின நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 159ஆவது பிறந்த தின நிகழ்வுகள், மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மத வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து சாரண மாணவர்கள் பங்குபற்றிய துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணமும் வவுனியா நகரெங்கும் வெகு சிறப்பாக நடைபெற்றதுடன். தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணர்களின் கலை நிகழ்வுகளும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9ஆவது தேசிய சாரணர் ஜம்போறியில் பங்குபற்றிய மாவட்ட சாரணர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று இலங்கையின் பிரதிநிதியாக மொரோக்கோ மற்றும் சார்ஜா சென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திரி சாரணர்களான திரு சு.காண்டீபன், திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தரு சின்னம் பெற்றவர்களான திரு அ.அனந்தன், வி.அனோஜன் ஆகியோரும் இங்கு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதி நிகழ்வாக திரிசாரணர்களின் ஸ்தாபகர் தின இரத்ததான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் அதிதிகளாக வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான திரு எம்.எஸ்.பத்மநாதன், ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ.பொன்னையா, தாண்டிக்குளம் வித்தியாலய அதிபர் திருமதி மோகன், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் கௌரவ செயலாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான திரு சு.காண்டீபன், உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு கு.கமலகுமார், திரு வி.அனோஜன், சாரண ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.