சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க விசேட செயலணி-

zxzxவவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க விசேட செயலணி மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விசேட செயலணியொன்றும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்தமைக்குரிய காரணங்கள், அதனைத்தடுக்க மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி மாவட்ட மட்ட செயலணி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பில் அரச அதிபரின் கீழ் செயலணியொன்று செயற்பட்டமையால் அதனை இதன்போது மீள்புனரமைப்பு செய்து வலுவுள்ள செயலணியாக மாற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம்.பி.நடராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

குற்றவாளிகளை விசேட பாதுகாப்புடன் வைக்க ஏற்பாடு-

jailபாரிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான குற்றவாளிகளின் வழக்கு விசாரணைகளின் போது, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலிருப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதற்காக, விசேட அனுமதியொன்றை நீதி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மேற்கண்ட குற்றவாளிகள், அவர்கள் தொடர்பான வழக்குகளில் மாத்திரமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தெமட்டகொடை சமிந்த என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்தே, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இணையதளங்கள் தடை செய்யப்பட மாட்டாது-

maithriஇலங்கையில் இணைய தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் இணைய தளமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இணைய தளங்களை தடை செய்யும் திட்டங்கள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. இவ்வாறான ஓர் நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் இணையதளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

நிலங்களை மீளக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்-

dfdfdffயாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த தங்களை மீள்குடியேற்றக் கோரி 32 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில் மாலை 5மணி வரையில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக பொதுமக்களுடைய நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்தவேண்டும், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வந்து மேற்படி உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. இன்றைய தினம் மருதனார் மடம் கண்ணகி முகாமில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மக்கள் தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக உட னடியாக விடுவியுங்கள், விமான நிலையம், துறைமுகம் விஸ்த்தரிப்பிற்காக மக்களுடைய நிலத்தை எடுக்காதீர்கள் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக 32 முகாம்களிலும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாக அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் செயற்பாடு-

mangala_samaraweeraபயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம் பெற்ற ஜனநாயக சமூக கட்டுப்பாட்டு வாரியத்தின் 20 வது அமர்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரவித்திருந்தார். எனவே இனப்பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளை எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் காரணமாக இலங்கையில்,அரசியல் பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு என்பன ஏற்படும் என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் இல்லை. எனினும் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை சர்வதேச நியமத்தின் அடிப்படையில் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரொக்கட் கழக வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்-

a1d0e597-4b25-4459-96a4-7118cbb29f71வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு உமாமகேஸ்வரன் வீதியில் உள்ள ரொக்கட் விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் (கோவில்குளம் இந்து கல்லூரிக்கு அருகாமையில்) 3 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது கடந்த கால நிகழ்வுகள் கூட்டறிக்கைகள் கணக்கு அறிக்கைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.

எனவே இந்நிகழ்விற்கு முன்னாள் ரொக்கட் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இவ்விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டங்கள் நீண்ட காலமாக இன்னும் நடைபெறவில்லை. இதேவேளை வவுனியா மண்ணில் பிரபல்யமாக விளங்கிய ரொக்கட் விளையாட்டு கழகத்தினை மறுசீரமைப்பு செய்ய சகலரும் முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற பதவி உருவாக்கம்-

parliamentபாராளுமன்ற செயற்குழுவின் பிரதானி என்ற புதிய பதவி முதற்தடவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதலவாது தடவையாக பாராளுமன்ற செயற்குழுவின் பிரதானியாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் சலுகைகள் இவருக்கு கிடைக்கப்பெறுகின்றது.